ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது…!

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க்-கின் கைவசம் உள்ளது. இது நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும்.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில் குழு-6 அனுப்பட்டது. முன்னதாக இந்த விண்கலம், ஸ்பேஸ்எக்ஸ் டெமோ-2, ஸ்பேஸ்எக்ஸ் குழு-2 மற்றும் ஆக்ஸியம் மிஷன்-1 திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. குழு-6ன் பயணக் காலம் முடிவடைய உள்ளதால் குழு-7 ஐ விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று(புதன்கிழமை) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியீட்டுள்ளது. அதன்படி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு-7 ஐ வின்னில் ஏவ ஆகஸ்ட் 15-ந்தேதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கமாண்டர் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் நிபுணர்களாக இருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.