மூணாறு:இடுக்கியில் பணி ஓய்வு பெற்ற போலீஸ் பெண் மோப்ப நாய் ஜெனிக்கு மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைத்தனர்.
திருச்சூர் கேரளா போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி 2015 முதல் இடுக்கி மோப்ப நாய் படையில் பணியாற்றியது.
கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது பத்து வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது. இதனை போலீசார் போல மரியாதை அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
இடுக்கி மோப்ப நாய் படை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனி, மோப்ப நாய் சீருடையில் வந்தது. அதனை இடுக்கி எஸ்.பி. குரியாகோஸ் மாலையிட்டு வரவேற்றார்.
அதன்பிறகு போலீஸ் நடைமுறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
வழக்கமாக பணி ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் திருச்சூர் போலீஸ் அகாடமி ஓய்வு முகாமுக்கு கொண்டு செல்லப்படும்.
ஆனால் ஜெனியை இடுக்கி மோப்ப நாய் பிரிவு எஸ்.ஐ.சாபு தனது வீட்டிற்கு கொண்டு செல்வதாக கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்ற எஸ்.பி. அவரிடம் ஒப்படைத்தார். பல ஆண்டுகளாக பழகிய சாபுவுடன் ஜெனி உற்சாகத்துடன் சென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement