இலங்கை கடற்ப்பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழில் முறையான இழுவைமடித் தொழிலை மேற்கொண்டிருந்த நிலையில், 15 தமிழக கடற்றொழிலாளர்களும் இரண்டு மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற் படையினர் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக தமிழக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் தவறானவை எனவும், இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களின் வற்புறுத்தல்கள் காரணமாகவே எல்லை தாண்டி வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்ப்படுவதாகவும் தெரிவித்துள்ளதுள்ளார்.
மேலும், குறித்த கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக கடமையை வடக்கு கிழக்கின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும், தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்திய மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.