உக்ரைனில் பள்ளிக்கூடம் மீது நடந்த டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு – போர்க்குற்றம் புரிந்ததாக ரஷியா மீது குற்றச்சாட்டு

கீவ்,

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 16 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் அவ்வப்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடுகின்றன.

இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் சபோரிஜியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. அப்போது அந்த பள்ளிக்கூடத்தின் மீது ரஷியா திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பள்ளிக்கூடத்தின் மீது நடந்த இந்த டிரோன் தாக்குதல் குறித்து அந்த மாகாண கவர்னர் யூரி மலாஷ்கோ ரஷியா மீண்டும் போர்க்குற்றம் புரிந்ததாக கூறினார்.

இதற்கு முன்னரும் ரஷியா ஏற்கனவே பலமுறை இதுபோன்ற போர்க்குற்றங்களை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியது. அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் உக்ரைன், எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.