ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் தலைகாட்டும் சனுஷா
ரேனிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு 2016 வரை ஓரளவு கதாநாயகி மற்றும் தங்கை கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருந்தன. தமிழில் 2017ல் வெளியான கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தார் சனுஷா.
அதே சமயம் மலையாளத்தில் 2016ல் தான் கடைசியாக இவர் நடித்த படம் வெளியானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சனுஷா. தற்போது ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஊர்வசியுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'ஜலதார பம்பு செட் சின்ஸ் 1962' என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது.
மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மலையாள திரையுலகத்திற்கு திரும்பி உள்ளது குறித்து சனுஷா கூறும்போது, “மலையாள திரையுலகை கடந்த ஆறு வருடங்களாக ரொம்பவே மிஸ் பண்ணினேன். அதே சமயம் ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வருகிறேன். அதிலும் இந்த படத்தில் ஊர்வசியுடன் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார் சனுஷா.