கொரியா ஓபன் பேட்மிண்டன்: சிக்கி ரெட்டி-ரோஹன் கபூர் ஜோடி 2-வது சுற்றுக்கு தகுதி

யோசு,

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-23, 21-13, 12-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சோன் ஹூன் சோ-லீ ஜூங் ஹூன் ஜோடியிடம் போராடி தோற்றது. மற்றொரு ஆட்டத்தில் சிக்கி ரெட்டி-ரோஹன் கபூர் ஜோடி 21-17, 21-17 என்ற நேர்செட்டில் பிலிப்பைன்சின் ஆல்வின் மோராடா-அலிசா யாபெல் லீனார்டோ இணையை வென்று 2-வது சுற்றை எட்டியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 18-21, 21-10, 13-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் பாய் யு போவிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். ஓராண்டாக எந்த பட்டமும் வெல்லாத சிந்துவின் பரிதாபம் தொடருகிறது. மேலும் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப், தஸ்னிம் மிர், அஷ்மிதா சாலிஹா, மாள்விகா பான்சோத் ஆகியோரும் தங்கள் ஆட்டங்களில் தோல்வியை தழுவினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.