நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்… புயலை கிளப்ப காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!

மணிப்பூர் கலவரம் ஒட்டு மொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டம், வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் 31 மசோதாக்கள் மீது அரசு விவாதிக்கும் என தெரிகிறது. நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, கூட்டுக் குழுக்களுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் உட்பட மொத்தம் 31 மசோதாக்களை மத்திய அரசு விவாதிக்கும் என கூறப்படுகிறது.

இந்த மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் மணிப்பூர் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய கூட்டத்தில் அனல் பறக்கும் என்றும் கூறப்படுகிறது.

மணிப்பூர் கலவரம் பிரதாணமாக பேசப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என தெரிகிறது.

கடந்த மே மாதம் முதல் மணிப்பூரில் நிலவி வரும் இனக்கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறத்தியுள்ளன.

மேலும் 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து விவாதிக்குமாறும், அனைத்து நாடாளுமன்ற அலுவல்களையும் நிறுத்துமாறும் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர். இதனால் இன்றைய கூட்டத்தில் மணிப்பூர் கலவரம்தான் முக்கிய பிரச்சனையாக பேசப்படும் என தெரிகிறது.

இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.