புதிய அரசாங்கத்தின் முதல் வருடத்தில் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொன்க் தெரிவித்தார்.
இந்த வார ஆரம்பத்தில் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு புத்தகப் பைகள், காகிதாதிகள், பாடசாலை சீருடைகளுக்கான துணிகள் மற்றும் கல்வி உபகரணங்களை அண்மையில் சீனா வழங்கியது குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார்.
பொருளாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்காக நேரடி தனியார் முதலீடுகள் மற்றும் விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என்று பிரதமர் கூறினார்.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.
பிரதமர் ஊடக பிரிவு