ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்தது இலங்கை

கொழும்பு,

கடந்த 8ந்தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று நள்ளிரவு மீன் பிடித்துவிட்டு அதிகாலையில் கரை திரும்பும்போது, எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர், படகையும், 15 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதி, தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள இழு வலையை கொண்டு மீன் பிடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்ச்சியாக நடைபெற்றாலும், மனிதாபிமான அடிப்படையில் இன்று விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், இன்று விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் இதே குற்றச்சாட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.