Unexploded bombs in the house of terrorists… confiscated! | பயங்கரவாதிகள் வீட்டில் வெடிக்காத குண்டுகள்… பறிமுதல்!

பெங்களூரு,: கர்நாடக மாநிலம், பெங்களூரில் நேற்று முன்தினம் ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரது வீட்டில் வெடிக்காத நான்கு கையெறி குண்டுகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய அளவில் நாச வேலைகளை நடத்த, மேலும் பலர் ஊடுருவியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், பெங்களூரு முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.

மத்திய உளவுத் துறை எச்சரிக்கையை அடுத்து, பெங்களூரு சுல்தான் பாளையா பகுதியில் நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த சையது சுஹைல், உமர், ஜனித், முதாசீர், ஜாகித் ஆகிய ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து, ஏழு நாட்டு துப்பாக்கிகள், நான்கு வாக்கி டாக்கிகள், 45 தோட்டாக்கள், வெடிமருந்துகள், இரண்டு சாட்டிலைட் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ஒருவர்

கைதான ஐந்து பேரையும் ஏழு நாட்கள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள், பெங்களூரில் பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.

கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இரண்டு உதவி கமிஷனர்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, மைசூரு, தாவணகெரேவில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில், தாவணகெரேவில் பயாஜ் உல்லா, 30, என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மைசூரிலும் ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், கைதான பயங்கரவாதி ஜாகித் தங்கியிருந்த ஹெப்பால் அருகேயுள்ள கோடிகேஹள்ளி வீட்டில் நேற்று காலை போலீசார் நடத்திய சோதனையில், ஒரு சணல் பையில் பிளாஸ்டிக் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கையெறி குண்டுகள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர்.

நகரில் ‘ஹை அலெர்ட்’

கைதானவர்கள் தவிர, மேலும் பல பயங்கரவாதிகள் பெங்களூரில் ஊடுருவி, பதுங்கியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால், நகர் முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், மெஜஸ்டிக் பஸ் நிலையம் உட்பட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணியரின் உடைமைகள், தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தலைமையில், நேற்று உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பின், அவர் அளித்த பேட்டி:

கைதான பயங்கரவாதிகளிடம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படுகிறது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். வெடிக்காத கையெறி குண்டுகள் இருப்பதை அறிந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வந்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன.

வேறு ஒரு பயங்கரவாதி, இவர்களுக்கு அதை வழங்கியுள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு, ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபடும் வகையில், கொஞ்சம் கொஞ்சமாக வெடி பொருட்களை சேகரித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது. தேவைப்பட்டால் மத்திய விசாரணை அமைப்புகளின் உதவியை நாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

4 பயங்கரவாதிகள் கைது!

கேரளாவில், வழிபாட்டு தலங்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமூக தலைவர்கள் மீது பயங்கர வாத தாக்குதல் நடத்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்டையில், கேரள பயங்கரவாத எதிர்ப்பு படையுடன் சேர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பலனாக, தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் ஆஷிப் என்ற பயங்கரவாதியை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, செயித் நபீல் அகமது, ஷியாஸ், ராயீஸ் என்ற மூவரையும் கைது செய்தனர்.இவர்களுக்கு சொந்தமான, திருச்சூர் மாவட்டத்தில் மூன்று இடங்கள் மற்றும் பாலக்காட்டில் ஒரு இடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ‘டிஜிட்டல்’ சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.