சென்னை:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். 90 வயது நிரம்பிய அவர் தற்போது கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வரை கோயில்களுக்கு செல்வதும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுமாக இருந்து வந்த தயாளு அம்மாள் தற்போது வயது மூப்பால் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
கடந்த வாரம் தனது பிறந்த நாளை கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாள் கொண்டாடினார். இதில் முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க. அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நீண்டநாட்களுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினும், அழகிரியும் சந்தித்துக் கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு இன்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவர் உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் கிடைத்த உடனேயே, முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, மருத்துவர்களிடம் பேசினார். உணவு ஒவ்வாமை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.