இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 25 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் வடக்கு ரயில்வேக்கு 4, மேற்கு ரயில்வேக்கு 2, தெற்கு ரயில்வேக்கு 3, தென்கிழக்கு மத்திய ரயில்வேக்கு 1, கிழக்கு ரயில்வேக்கு 1, கிழக்கு கடலோர ரயில்வேக்கு 1, மத்திய ரயில்வேக்கு 3, மேற்கு மத்திய ரயில்வேக்கு 2, தெற்கு மத்திய ரயில்வேக்கு 1, வட மேற்கு ரயில்வேக்கு 2, தென்கிழக்கு ரயில்வேக்கு 1,
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை
வடகிழக்கு பிராண்டியர் ரயில்வேக்கு 1, தென்மேற்கு ரயில்வேக்கு 1, வடகிழக்கு ரயில்வேக்கு 1 என ரயில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 45 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விடுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், வந்தே மெட்ரோ ரயில், வந்தே பாரத் சரக்கு ரயில் உள்ளிட்டவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
வைகோ எழுப்பிய கேள்வி
இந்நிலையில் வந்தே பாரத் ரயில் சேவை குறித்து மாநிலங்களவையில் மதிமுக எம்.பி வைகோ சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், இந்திய ரயில்வே ஜூலை 2023ல் ரயில் எண் 22549/ 22550 கொண்ட கோரக்ப்பூர் – லக்னோ மற்றும் ரயில் எண் 12461/ 12462 கொண்ட ஜோத்பூர் – சபர்மதி ஆகிய இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
தென்னிந்தியாவில் குறைவு
இதையும் சேர்த்தால் மொத்தம் 25. வழித்தட சாத்தியக் கூறுகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு புதிய சேவைகளை அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தென்னிந்தியாவில் ஏன் அதிகப்படியான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இல்லை. இப்பகுதி வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றில் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இந்திய ரயில்வே திட்டம்
இதனால் தேவையும் அதிகமிருப்பதாக வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, இந்திய ரயில்வேயை பொறுத்தவரை மாநில வாரியாக அல்லது மண்டல வாரியாக எந்த ஒரு ரயில் சேவையையும் அறிமுகம் செய்வதில்லை. இருப்பினும் தமிழ்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு ரயில் எண் 20643/ 20644 கொண்ட சென்னை – கோவை,
தென்னிந்திய ரயில் சேவைகள்
ரயில் எண் 20607/ 20608 கொண்ட சென்னை – மைசூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதுதவிர விசாகப்பட்டினம் – செகந்திராபாத், செகந்திராபாத் – திருப்பதி, காசர்கோடு – திருவனந்தபுரம், கே.எஸ்.ஆர்.பெங்களூரு – தர்வார் ஆகிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தென்னிந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.