நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் பாஸ்வேர்டு பகிர்ந்து கொள்வதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதனை பின்பற்றி ஹாட்ஸ்டார் நிறுவனமும் புதிய மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஹாட்ஸ்டார் உறுப்பினர்கள் 4 பேரிடம் மட்டுமே கணக்கின் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் வகையிலான மாற்றத்தை விரைவில் அமல்படுத்த இருக்கிறது. இது யூசர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்டாரின் அடுத்த பிளான்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்கள் அதிகபட்சம் 4 சாதனங்களில் மட்டுமே லாக் – இன் செய்ய முடியும் என அதன் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், தற்போது வரை இந்தியாவில் பிரீமியம் சந்தாதாரர்கள் 10 சாதனங்களில் லாக்-இன் செய்ய முடிகிறது. பிரீமியம் சந்தாதாரர்களுக்கான அனுமதியை மட்டுப்படுத்தும் முயற்சியை,டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் சோதித்து பார்த்துள்ளது. இதனை இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதை செயல்படுத்தத் ஹாட்ஸ்டார் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் புதிய பயனர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையை அந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் செய்த மாற்றம்
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய கட்டுப்பாடை அமல்படுத்தியது. அதன்படி, சந்தாதாரர்கள் தங்களது குடும்ப நபர்களை தவிர்த்து பிறருடன் கணக்கை பகிரிந்து கொள்ள கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த பாணியில் தான் டிஸ்னியின் புதிய திட்டமும் அமலுக்கு வர உள்ளது. ஆனால், வால்ட் டிஸ்னி நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இந்தியாவில் அதிக யூசர்கள்
இந்தியாவில் 5 கோடி யூசர்களைக் கொண்டு ஸ்ட்ரீமிங் சேவையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஜனவரி 2022 முதல் மார்ச் 2023 வரை இந்தியாவின் ஒடிடி தள வியூவர்ஷிப்பில் 38 சதவிகிதத்தை கொண்டுள்ளது. மற்ற ஒடிடி தளங்களுடன் ஒப்பிடுகையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் ஆகியவை தலா 5 சதவிகிதம் மட்டுமே யூசர்களை கொண்டிருக்கிறது. புதிய கட்டுப்பாடுகளை விதித்து பிரீமியம் சந்தாதாரர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டாம் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் கருதுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.