சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அடுத்த வாரத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
ரஜினியின் முதல் காதல் குறித்து கேட்ட நெல்சன் திலீப்குமார்: நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர். இந்தப்படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது படம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனிருத், நெல்சன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக முன்னதாக 1000 பேருக்கு இலவச பாஸ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சை கேட்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
அதற்கு ஏற்றாற்போல ரஜினியின் பேச்சு நிகழ்ச்சியில் மாஸாக இருந்தது. தன்னுடைய குடிப்பழக்கம் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்துக் கொண்டு, தற்காலத்திய தலைமுறையினர் எப்படி இந்தப் பழக்கத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ரஜினி அறிவுறுத்தியிருந்தார். சூப்பர்ஸ்டாரை தவிர தன்னுடைய கெட்டப்பழக்கத்தை வெளிப்படுத்தும் தைரியம் யாருக்கு வரும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் குட்டி கதை ஒன்றையும் கூறிய ரஜினிகாந்த், நெல்சன் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். முதல் நாள் சூட்டிங்கில் முதல் ஷாட்டை எடுத்து முடித்த நெல்சன், தன்னிடம் வந்து, தன்னுடைய முதல் காதல் குறித்து கேட்டதாகவும் ஏன் இதை கேட்கிறீர்கள் என்று தான் பதில் கேள்வி கேட்டதாகவும் ரஜினி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய நெல்சன், தன்னை சார்ஜ் செய்துக் கொள்ளவே இதை கேட்பதாக கூறியதாகவும் இதையடுத்து இது என்னடா புதுசா இருக்கு என்று தான் திகைத்ததாகவும் ரஜினி தன்னுடைய பேச்சில் கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து தான் பல இயக்குநர்களிடம் கதை கேட்டதாகவும் அவை அனைத்தும் பாட்ஷா, அண்ணாமலை டைப் ஸ்டோரிக்களாகவே இருந்ததாகவும் அதனால் அவற்றை தான் ரிஜக்ட் செய்ததாகவும் ரஜினி தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். ஆனால் நெல்சன் தனக்காக ஒரு கதையை சொன்னதாகவும் பீஸ்ட் சூட்டிங்கை தொடர்ந்து 10 நாட்களில் அதை விரிவாக கூறுவதாக சொல்லி சென்றதாகவும் பின்னர் அவர் பீஸ்ட் சூட்டிங்கை தொடர்ந்து விவரித்த ஜெயிலர் கதை, தன்னை முழுமையாக இம்ப்ரஸ் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.