ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவு பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிலவின் தென் துருவத்தை நோக்கி விண்ணில் ஏவப்பட்டது.
இந்த சந்திரயான் – 3, ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்குப் பின் நிலவைச் சுற்றிவந்து, ஆகஸ்ட் 23-ம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 6.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘PSLV-C56’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சாட்’ என்ற பிரதான செயற்கை கோள் உட்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்த ‘டிஎஸ்-சாட்’ செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. இன்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை துளை ரேடார் கருவி அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.