ஒரு தலைக்காதல்.. தட்டிக்கேட்ட பெண் வீட்டாரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய "புள்ளிங்கோ"..

சென்னை:
பெண்ணை ஒரு தலையாக காதலிப்பதாக கூறி அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ‘புள்ளிங்கோ’ இளைஞர் ஒருவர், அதை தட்டிக்கேட்ட அப்பெண்ணின் குடும்பத்தினரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அதுவும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிப்பது, அதற்கு அப்பெண் சம்மதிக்காவிட்டால் அவரை கொலை செய்வது என மோசமான மனநிலையில் இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

சுவாதி கொலையில் தொடங்கிய இந்த விபரீதம், பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிடுவது வரை தொடர்கிறது. பற்றாக்குறைக்கு தற்போது கஞ்சா புழக்கமும் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன. அப்படியொரு சம்பவம்தான் சென்னையில் நடந்திருக்கிறது.

சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். 22 வயது ஆகிறது. எந்த வேலை வெட்டிக்கும் செல்லாத செல்வக்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் ஊர் சுற்றுவது; அப்பகுதி பெண்களை கிண்டல் செய்வது என அனைத்து தறுதலை வேலைகளையும் பார்த்து வந்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாகவும் செல்வக்குமார் காதலித்தும் வந்திருக்கிறார். அந்தப் பெண் எங்கு சென்றாலும் பின்னாலேயே சென்று தொந்தரவு செய்து வந்திருக்கிறார் செல்வக்குமார்.

பல மாதங்களாக செல்வக்குமாரின் தொந்தரவை பொறுத்துக் கொண்டிருந்த இளம்பெண், ஒருகட்டத்தில் இதை தனது வீட்டில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் செல்வக்குமாரை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார், நேற்று தனது நண்பனுடன் அப்பெண்ணின் அத்தை வீட்டுக்கு சென்று அங்கிருந்தவர்களை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வக்குமார் மற்றும் அவரது நண்பரான கணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.