சினிமா வாய்ப்பின்றி யாசகம்; அப்பு கமலுடன் நடித்த மோகன் ஆதரவற்ற நிலையில் மரணம்!

நடிகர் கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் துணை நடிகர் மோகன். மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆதரவின்றி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் மோகன்

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் சின்னு. இவரின் இளைய மகன் மோகன். உயரம் குறைவாக பிறந்ததால் பல்வேறு அவமதிப்புக்கு ஆளானவர் வீட்டை விட்டு வெளியேறி திரைப்படங்களில் நடிக்க நீண்டகாலம் முயற்சி செய்தார்.

ஒருவழியாக திரைப்படங்களில் துணை நடிகராக நடிக்க வாய்ப்பு பெற்றவர், கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் அப்பு கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்துப் பிரபலமானார்.

அப்பு கமலின் நண்பராக மோகன் (கடைசியில்)

அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அதேநேரம் உறவினர்களைத் தேடி சொந்த ஊருக்கும் செல்லவும் முடியவில்லை.

வறுமையில் வாடியவர் சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்துள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் அருகே யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.

இறந்த நிலையில்

தான் திரைப்படங்களில் நடித்ததை யாரிடமும் சொல்லாமல் அங்கேயே சாலையோரத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் மோகனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது திரைப்படத்தில் நடித்த போட்டோக்கள், உறவின முகவரி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அதோடு சேலத்திலிருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் வந்து உடலை பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதி மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.