பீட்சா 4ம் பாகம் தயாராகிறது : தயாரிப்பாளர் அறிவிப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முதல் படம் 'பீட்சா'. இதில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே இதன் இரண்டாம் பாகம் 'பீட்சா 2: தி வில்லா' என்ற பெயரில் வெளியானது. இதில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தனர். தீபன் சக்ரவர்த்தி இயக்கி இருந்தார்.

கடந்த வாரம் 'பீட்சா 3: தி மம்மி' படம் வெளியானது. இதில் அஸ்வின் காக்மனு, பவித்ரா மாரிமுத்து நடித்திருந்தார்கள், மோகன் கோவிந்த் இயக்கி இருந்தார். இந்த இரு படங்களுமே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பீட்சா 4வது பாகம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் சி.வி.குமார் வெளியிட்டுள்ளார்.

‛‛ 'பீட்சா' மூன்று பாகங்களின் வரிசையின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும், தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 'பீட்சா' நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்கிறார் சி.வி.குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.