அயோத்தி ராமர் கோயிலுக்கு 400 கிலோ எடையில் பிரம்மாண்ட பூட்டு: அலிகர் கலைஞர் தயாரித்துள்ளார்

அலிகர்: அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்குவதற்காக, உ.பி. அலிகர் பகுதியைச் சேர்ந்த பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் ஒருவர், 400 கிலோ எடையில் பிரம்மாண்ட பூட்டை தயாரித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயிலுக்கு நன்கொடையாக பலவிதமான பொருட்களை அளிக்க ஏராளமான பக்தர்கள் முன்வந்துள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசம் அலிகர் நகரில் உள்ள பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் சத்ய பிரகாஷ் சர்மா என்பவர் ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க கையால் செய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய பூட்டு ஒன்றை தயாரித்துள்ளார். இதன் உயரம் 10 அடி, அகலம் 4.5 அடி, தடிமன் 9.5 அங்குலம். இதன் எடை 400 கிலோ. இதன் சாவியின் நீளம் 4 அடி. இது குறித்து தீவிர ராம பக்தரான சத்ய பிரகாஷ் சர்மா கூறியதாவது.

எங்கள் குடும்பத்தினர் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பூட்டு நகரம் என அழைக்கப்படும் அலிகரில் நான் 45 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டு தயாரித்து வருகிறேன். ராமர் கோயிலுக்காக பிரம்மாண்ட பூட்டு ஒன்றை தயாரித்துள்ளேன். இந்த பூட்டு அலிகர் கண்காட்சியில் இந்தாண்டு தொடக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் தற்போது சிறு சிறு மாற்றங்களை செய்து வருகிறேன். இந்த பூட்டு தயாரிப்பை அன்பின் வேலையாக கருதுகிறேன். இதற்கான தயாரிப்பில் எனது மனைவி ருக்மணியும் எனக்கு உதவியுள்ளார். இதை தயாரிக்க ரூ.2 லட்சம் செலவானது. எனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் செலவு செய்து இந்த பூட்டை தயாரித்துள்ளேன். இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இவ்வாறு சத்ய பிரகாஷ் சர்மா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.