'கச்சத்தீவை தாரைவார்த்ததே திமுகதான்.. தமிழக முதல்வர் எனக்கு கடிதம் எழுதுகிறார்'.. ஸ்டாலினை சாடிய மோடி!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் அளித்தார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நின்றப்படியே பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சரமாரியாக விளாசினார். குறிப்பாக தமிழகம் குறித்தும் திமுக குறித்தும் பேசினார் பிரதமர் மோடி.

அமைச்சர் எவ வேலு, இந்தியா என்றால் வட நாடு என்று பேசியதை குறிப்பிட்ட மோடி, திமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவில் இல்லை போல என விமர்சித்தார். மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அதாவது, தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்கக்கோரி தனக்கு கடிதம் எழுதுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, நமக்கு சொந்தமான இடத்தை இன்னொரு நாட்டுக்கு கொடுத்தவர்கள்தான் திமுகவினர் என்றார்.

இந்திரா காந்தியின் பெயரால்தான் கச்சத்தீவு இன்னொரு நாட்டிற்கு கொடுக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார். 2018 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போதும் அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 2028 ஆம் ஆண்டாவது எதிர்க்கட்சிகள் முன் தயாரிப்போடு வருவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

மோடி இந்தியா மாறி மாறி கூச்சலிட்ட கட்சியினர்

கொஞ்சம் மூளையை பயன்படுத்தி யோசியுங்கள் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.மேலும் ராகுல் காந்தி பாரத மாதா குறித்த பேசியதை மன்னிக்கவே முடியாது என்ற பிரதமர் மோடி நாடு 3 துண்டுகளாக பிரிய காரணமானவர்கள் பாரத மாதா கொலை செய்யப்பட்டதாக பேசுவதா? என விளாசினார். வந்தே மாதரம் என்ற முழக்கத்தையும் காங்கிரஸ்கட்சி அவமானம் செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி சாடினார். தமிழ்நாட்டில் பாரத மாதாவுக்கு பூஜை செய்ய முடியவில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

2047ல் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்ற பிரதமர் மோடி, நாங்கள் தலை குனியவும் மாட்டோம் பாதையில் இருந்து விலகவும் மாட்டோம் என்றார். இந்தியா உடைவதை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் பிரதமர் மோடி சூளுரைத்தார். பிரதமர் மோடியின் உரை நிறைவடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஏற்கனவே மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.