“நாடாளுமன்றத்தில் திமுக-வின் குரலைக் கேட்டாலே பாஜக நடுங்குகிறது!" – முதல்வர் ஸ்டாலின்

சமீப நாள்களாக மத்தியில் ஆளும் பாஜக உறுப்பினர்கள் முதல் பிரதமர் வரை, தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் ஊழல் என்றால் திமுக தான் என்று விமர்சித்துவருகிறது. பிரதமர் மோடி கூட, குடும்ப ஆட்சி என மத்திய பிரதேசத்தில் நடந்தகூட்டத்தில் திமுக-வை டார்கெட் செய்தார். நேற்று நாடாளுமன்றத்தில், ஊழல் என்றால் தி.மு.க-வை திரும்பிப் பாருங்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியிருந்தார். இவ்வாறு பா.ஜ.க, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயெனும், வெளியேயும் தி.மு.க-வை குறிவைத்துப் பேசிவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தி.மு.க-வின் குரலைக் கேட்டாலே பா.ஜ.க நடுங்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், தி.மு.க தொண்டர்கள், தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட தி.மு.க-வின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்தியப்பிரதேச மற்றும் அந்தமான் நிக்கோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் ராகுல் காந்தி.

‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ.க-வின் ஆட்சியில், மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி. அவருடைய வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி, தன் பேச்சில் தி.மு.க மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார். ஆ.ராசா சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, ஒன்றிய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில், “நான் கைது செய்யப்படப் போவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று ஆ.ராசா நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளும் தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை.

அமித் ஷா, மோடி

பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க அரசு தன் கைப்பாவையாகப் பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, `எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்’ என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது. தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கழகத்தின் தங்கை கனிமொழி, சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ.க-வின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க-வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.