தமிழ்நாடு முதலமைச்சர்
இன்று அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எஸ்.எஸ்.சிவசங்கர், சேகர்பாபு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்” என்று அறிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகை
முதலமைச்சரின் அந்த அறிவிப்பின் படி அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகளை 152.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக,
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகள்,சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 15 பேருந்துகள்,கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகள்,திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகள்,
என மொத்தம் 100 பேருந்துகள் 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மஞ்சள் வண்ணத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இருக்கை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுதந்திர தின விடுமுறை, வார விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் 1100 சிறப்பு பேருந்துகளை இயக்கும் நிலையில் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.