வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலம், இன்று அடுத்தக்கட்ட நிலைக்கு செலுத்தப்பட்டது. நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் 3வது முறையாக குறைக்கப்பட்டது. அடுத்த கட்டமான தூரம் குறைப்பு ஆக.,16ம் தேதி காலை 8:30 மணிக்கு நிகழ்த்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த, ஜூலை 14ல் செலுத்தியது. இம்மாதம், 5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, சந்திராயன் -3 இன்று (ஆக.,14) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அது நிலவை மிக அருகில் நெருங்கியுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தரப்பில், ‘இன்று நிகழ்த்தப்பட்ட துல்லியமான நடவடிக்கையில் விண்கலம் 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த நகர்வு ஆகஸ்ட் 16ம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதி விண்கலம் சுமந்து சென்றுள்ள, ‘லேண்டர்’ எனப்படும் தரையிறங்கும் சாதனம் அதில் இருந்து நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, ‘ரோவர்’ எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
ஆக.23 ல் சந்திரயான் நிலவில் தரையிறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement