ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடக்கம்

புதுடெல்லி,

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. அக்.5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டியை நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும். இது அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை கிடைக்கும். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி விற்கப்படும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.