சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு… இவர்களுக்கு மட்டும்தான் அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்படும். இதேபோல் ஒவ்வொரு மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் ஓணம், நிறை புத்தரிசி உள்ளிட்ட சிறப்பு நாட்களிலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நிறை புத்தரசிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த வாரம் திறப்பட்டது. இதில் தமிழகத்தின் ராஜபாளையத்தில் இருந்து நெற் கதிர்கள் பூஜைக்காக கொண்டு செல்லப்பட்டன. வளமும் செழிப்பும் வேண்டி நடத்தப்பட்ட இந்த நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் நாளை மறுநாள் ஆவணி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு தீபம் ஏற்றுவார். அதைத் தவிர நாளை வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது.

நாளை மறுநாள் அதாவது 17 ஆம் தேதி முதல் வரும் 21 ஆம் தேதி வரை நாள்தோறும் நெய் அபிஷேகம், கணபதி ஜோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். மேலும் படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதற்காக நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் திறக்கப்படுகின்றன.

நாளை மறுநாள் மலையாள வருடத்தின் முதல் நாள் என்பதால் அன்றைய நாள் சபரிமலையில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. அதன்பிறகு ஓணம் பண்டிகைக்காக வரும் 27 ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.