தலித் பற்றி பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட உபேந்திரா : எப்ஐஆரும் பதிவு

கன்னட திரையுலகில் இயக்குனர், நடிகர் என இரு முகங்கள் கொண்டவர் உபேந்திரா. அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த சத்யம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் பெரிய வரவேற்பை பெறத் தவறியது. இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தான் நடத்தி வரும் கட்சியின் வருடாந்திர நிறைவு விழாவை முன்னிட்டு சோஷியல் மீடியாவில் லைவ் வீடியோவில் பேசும்போது தலித்துகள் பற்றி மரியாதை குறைவான வார்த்தைகளை போகிற போக்கில் பேசி விட்டார் உபேந்திரா.

உபேந்திரா பேசும்போது விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசியவர், ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கே தலித்துகள் இருக்கத்தான் செய்வார்கள் என்கிற வார்த்தைகளை பிரயோகித்தார்.

இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சர்ச்சையையும் கிளப்பியது. இதைத்தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டு எப்ஐஆரும் போடப்பட்டுள்ளது. நிலைமை சீரியஸ் ஆவதை உணர்ந்த உபேந்திரா அந்த வீடியோவை உடனே அழித்துவிட்டார். மேலும் தான் எந்தவித உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை என்றும், பழமொழி சொல்வார்களே அதே போன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தபோது அப்படி பேசி விட்டேன் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.