நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சியினால் 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8892 குடும்பங்களைச் சேர்ந்த 29508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத் மேற்பார்வையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
செங்கலடி பிரதேச செயலக பிரிவில் கடும் வறட்சியினால் அதிகளவாக 8805 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலக பிரிவில் 6856 நபர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 6300 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் 4341 நபர்கள் பாதிப்புக்குள்ளாகியதுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் 2681 நபர்களும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் 525 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீரினை பிரதேச சபை பவுசர் வண்டிகள் மூலம் மே (வைகாசி) மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.