புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு

இலங்கை தற்போது முகங்கொடுத்த வரும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டுக்கு டெலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட இறால் பண்ணை உரிமையாளர்களுடனான சந்திப்பு அண்மையில் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் இறால் பண்ணை உரிமையாளர்களால் தங்கள் மாவட்டத்தில் இறால் வளர்ப்பில் தாங்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதனை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரினர். 

குறிப்பாக அவர்கள் சிலாபம் களப்பு பிரச்சினை, இறால்களுக்கு ஏற்படும்  நோய், வைட் ஸ்பொட் நோய்த் தாக்கம், கால்வாய் துப்புரவு, கழிமுகங்கள், கண்டல் தாவரம் வளர்ப்பு, தமது தொழிலை மேம்படுத்துவதற்கு நிபுணத்துவ ஆலோசனை, உற்பத்தி வீழ்ச்சி, வட்டியற்ற கடன் பெற்றுக் கொள்ளல், மின் கட்டணம் செலுத்துவதில் நிவாரணம், தமது உற்பத்திகளை சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்பு போன்றவற்றில் அரசு மற்றும் அமைச்சரின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவித்தாவது, அண்மையில் தான் அதிகாரிகள் சகிதம் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து அப் பகுதியிலுள்ள இறால் பண்ணைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் ஒருசில இறால் பண்ணைகளின் செயற்பாடுகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லையெனவும் தெரிவித்ததுடன், களப்பு பிரச்சினையையும் இறால் பண்ணைகளின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று குழப்பிக் கொள்ளக் கூடாதென தெரிவித்ததுடன்,  இப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அத்துடன் இவ் விடயம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து தீர்வைப் பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும் கூறினார். அத்துடன் இப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக நாரா, நக்டா, சிலாடா மற்றும் கடற்றொழில் அமைச்சின் நிபுணர்கள் அடங்கிய விசேட குழுவொன்றை அமைப்பதற்கு நவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நாரா, நக்டா, சிலாடா நிறுவனங்களின் உயரதிகாரிகள், முன்னாள் கடற்;றொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, மற்றும் புத்தளம் மாவட்ட இறால் பண்ணை உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.