பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர், (வெளிவிவகார ஆணைக்குழு அலுவலக பணிப்பாளர்) சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீக்கும் இடையிலான சந்திப்பொன்று (16) இடம்பெற்றது.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் 7வது சீனா-தெற்காசிய கண்காட்சியுடன் இணைந்ததாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நிதிக் கடன் தொடர்பான சவால்களை பயனுறுதிமிக்க வகையில் எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று திரு.வாங் யீ கூறினார்.
சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக இருப்பதாகவும், இலங்கை எப்போதும் சீனாவுடன் நட்புறவுடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், அடிப்படைத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவுடன் இணைந்து செயற்படுவதைப் பாராட்டுவதாகவும் கூறினார்.
இலங்கையின் இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய கீர்த்தியை பாதுகாப்பதில் சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், இலங்கையுடனான இராஜதந்திர அனுபவ பரிமாற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சுயாதீனமான அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்தவும், “வறுமைப் பொறி” மற்றும் “அபிவிருத்தியின்மை பொறியில்” இருந்து வெளியேறவும், தொழில்மயமாக்கல் செயன்முறை மற்றும் விவசாய நவீனமயமாக்கலை விரைவுபடுத்தவும் சீனா உதவும் என்று திரு.வாங் யீ உறுதியளித்தார்.
இலங்கை தனது தற்காலிக பின்னடைவுகளை வெற்றிகொண்டு, தேசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு அபிவிருத்திப் பாதையை கண்டுபிடித்து, மறுமலர்ச்சி மற்றும் செழிப்பை அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீனா-தெற்காசிய கண்காட்சியில் இலங்கை ஒரு முக்கிய பங்கேற்பாளர் மற்றும் பயனாளி என்று குறிப்பிட்ட அவர், சீன சந்தையை மேலும் ஆராய இந்த முக்கியமான தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இலங்கை தரப்பை கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதியான ஆதரவிற்காகவும், கடினமான காலங்களில் இலங்கைக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்கியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற இரு தரப்பினருக்குமிடையிலான முன்னோக்கிய முன்னுரிமை ஒத்துழைப்புத் திட்டங்கள் இலங்கை மக்களுக்கு நன்மை பயப்பதுடன், பிராந்திய இணைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியில் பெரும் பங்கை வகிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உணவு தன்னிறைவை அடைவதற்கும் முக்கிய கைத்தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் இலங்கைக்கு உதவும் வகையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், சுற்றுலா, எரிசக்தி மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சீனாவுடன் இலங்கை இணைந்து பணியாற்றும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு