யானை தந்த வழக்கில் மோகன்லால் ஆஜராக, கோர்ட் உத்தரவு
கடந்த 2012ம் ஆண்டு மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலின் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை அவரது கொச்சி வீட்டில் நடந்தபோது அங்கிருந்த 4 யானை தந்தங்களை கைப்பற்றினார்கள். அதற்கு உரிய லைசென்ஸ் பெறவில்லை என்பதால் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மோகன்லால் மீது வனத்துறை வழக்கு தொடர்ந்தது. மோகன்லாலுக்கு யானை தந்தம் கொடுத்த கிருஷ்ணகுமார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அப்போதிருந்த அரசு, மோகன்லாலை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றும் நோக்கில் வனத்துறை சட்டத்தில் திருத்தம் செய்து அவருக்கு தந்தங்களை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தது. இதன் காரணமாக அவர் மீதான வழக்கை வனத்துறை வாபஸ் பெற்றது. ஆனால் இதனை வழக்கு நடந்து வந்த பெரும்பாவூர் நீதிமன்றம் ஏற்கவில்லை. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு வாபஸை ஏற்கமுடியாது என்று அறிவித்த நீதிமன்றம், மோகன்லால் வழக்கை சந்தித்து தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். இதனால் அவர் வருகிற நவம்பர் 3ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.