18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளார். அவர் FIDE உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். விஷ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இதைச் செய்யும் முதல் இந்தியர் இவர்தான். இறுதிப் போட்டியில், அவர் இப்போது 5 முறை சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார். அரையிறுதியில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் 31 வயதான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். பிரஞ்னாந்தா உலக கோப்பை செஸ் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறியிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராகுல்காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். தாயார் நாகலட்சுமி தனது மகனுடன் அஜர்பைஜானில் உள்ளார். இது குறித்து பேசிய ரமேஷ் பாபு, ” என் மகனின் வெற்றியால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பல தடைகளைத் தாண்டி உச்சத்தை அடைந்திருக்கிறார். உலக தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ஹிகாரு நகமுரா மற்றும் 3-வது தரவரிசையில் உள்ள ஃபேபியானோ கருவானா ஆகியோரை பிரக்ஞானந்தா ஏற்கனவே தோற்கடித்து இருக்கிறார். இறுதிப் போட்டியிலும் வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பிரக்ஞானந்தா தினமும் என்னுடன் போனில் பேசுவார்.
(@FIDE_chess) August 21, 2023
நான் அவர் விளையாட்டில் தலையிடுவதில்லை. நான் பிரக்ஞானந்தாவின் தினசரி வழக்கத்தைப் பற்றி மட்டுமே கேட்கிறேன். விளையாட்டில் இதை அல்லது அதை செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கவில்லை. இது அவருடைய பயிற்சியாளரின் பங்கு. குறைந்தபட்சம் அதைத்தான் நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெற்றிக்குப் பிறகு, டைட்டில் போட்டியில் மேக்னஸ் உடன் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று பிரக்ஞானந்தா கூறினார். ஏனென்றால் இறுதிப்போட்டியில் மட்டுமே என்னால் அவருடன் விளையாட முடிந்தது. இறுதிப்போட்டிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் போட்டியிலும் பிரக்ஞானந்தா இடம் பிடித்துள்ளார்.