லட்சத்தீவு எம்.பி-யாக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது ஃபைசல். 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட மோதலில் எம்.பி முகமது ஃபைசலும், அவரின் சகோதரர்களும், மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலேவைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் முகமது சலே படுகாயமடைந்தார். இதையடுத்து எம்.பி முகமது ஃபைசல், அவரின் சகோதரர்கள் உட்பட சிலர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஃபைசல் குற்றவாளி என லட்சத்தீவு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்து, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது. இதையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஜனவரி 13-ம் தேதி அவர் மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், முகமது ஃபைசல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஜனவரி 25-ம் தேதி லட்சத்தீவு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து.
அதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரின் தகுதி நீக்கத்தை மக்களவைச் செயலகம் ரத்துசெய்தது. இதன் மூலம் மீண்டும் லட்சத்தீவு எம்.பி-யாக முகமது ஃபைசல் தன் பணியைத் தொடர்ந்தார். இந்த நிலையில் முகமது ஃபைசலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, கேரளா உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “முகமது ஃபைசலின் 10 ஆண்டுக்கால சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது. இருப்பினும் முகமது ஃபைசல், எம்.பி என்பதால் அவருக்கான சலுகைகள் தொடரும். அத்துடன் கேரளா உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறது.