தெலங்கானா கொடூரம்: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கும்பல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, 15 வயது சிறுமியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது 14 வயது சகோதரரும் பெற்றோரை இழந்துவிட்டனர். இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் அவர்கள் மீர்பேட்டில் உள்ள உறவினரின் வீட்டுக்கு குடியேறினர். சம்பவத்தின்போது அவர்கள் இருவரும் பக்கத்துவீட்டு குழந்தைகளுடன் வீட்டினுள் இருந்துள்ளனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டினுள் நுழைந்துள்ளது. கத்தியைக் காட்டி மிரட்டி அந்தக் கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. கும்பலில் சிலர் மற்றக் குழந்தைகளை கத்திமுனையில் மிரட்டிக் கொண்டிருக்க, எஞ்சியிருந்தோர் சிறுமியை மாடிக்கு தூக்கிச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் பரவ மீர்பேட் மேயர் பாரிஜாத ரெட்டி வீட்டை மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் முற்றுகையிட்டனர். மக்கள் ஆவேசத்தைத் தொடர்ந்து மேயர் வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரச்சகொண்டா காவல் ஆணையர் டிஎஸ் சவுகான் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். எல்.ஜி.நகர் துணை ஆணையர் பி.சாய்ஸ்ரீ கூறுகையில், “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டு பாலியல் வன்முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சகி மையத்துக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அவருடையை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.