காவிரி நீர் விவகாரம்: தமிழ்நாடு அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி,

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

உத்தரவிட கோரிக்கை

அதில், ஆகஸ்டு மாதத்துக்கான எஞ்சியுள்ள நாள்களுக்குத் தேவையான 24 ஆயிரம் கனஅடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதிசெய்ய வேண்டும். எஞ்சியிருக்கும் காலத்துக்கு தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டார்.

முறையீட்டு பட்டியலில் இல்லாததால், முறைப்படி பட்டியலில் இடம்பெறச் செய்து திங்கட்கிழமை மீண்டும் முறையிட தமிழ்நாடு அரசை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

தமிழ்நாடு முறையீடு

அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று முன்தினம் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, தமிழ்நாடு அரசின் மனு அவசரமாக விசாரிக்க வேண்டும். இது தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஓய்வுபெற்று விட்டதால் புதிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் என முறையிட்டார்.

முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, புதிய அமர்வு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

கர்நாடகா வலியுறுத்தல்

அதைத்தொடர்ந்து கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

புதிய அமர்வு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நாளை மறுநாள் விசாரணை

இதன்படி, காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.