பயங்கரவாதி ராணாவை நாடு கடத்தும் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை| US Court Blocks Terrorist Ranas Extradition Order

வாஷிங்டன், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய, நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த, பயங்கரவாதி தஹாவூர் ராணாவை, நம் நாட்டிற்கு நாடு கடத்த விதிக்கப்பட்ட உத்தரவுக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்க நாடான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, 62, அமெரிக்காவில், 2009-ல் பிடிபட்டார். இவர், பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, கடந்த மே மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர் சார்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில், பயங்கரவாதி தஹாவூர் ராணா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று, இந்த வழக்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி டேல் எஸ்.பிஷ்ஷர் உத்தரவிட்டதாவது:

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து, தஹாவூர் ராணா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் விசாரணை முடிவடையும் வரை, அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, வரும் அக்., 10ம் தேதிக்குள், தன் தரப்பு வாதத்தை சமர்ப்பிக்கும்படி, பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு உத்தரவிட்ட ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றம், நவ., 8ம் தேதிக்குள், தன் பதிலை சமர்ப்பிக்கும்படி அமெரிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.