கே.என்.நேருவுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு.. அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவர் கடந்த 2006 – 2011 கால கட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்ததோடு திருச்சி மாவட்ட

செயலாளராகவும் இருந்தார். அப்போது, திருச்சியில் திமுகவுக்கு புதிய மாவட்ட அலுவலகம் அமைக்க முடிவு செய்தார். அதன்படி, திருச்சியின் மையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போல திருச்சி அலுவலகத்திற்கு கலைஞர் அறிவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டது.

‘கலைஞர் அறிவாலயம்’ கட்டடத்துக்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு, தன்னை மிரட்டி மிகக் குறைந்த விலையே தரப்பட்டதாகவும் சீனிவாசன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி குற்றப்பிரிவு போலீசார் கே.என்.நேரு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கே.என்.நேரு அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நில அபகரிப்பு வழக்கு கடந்த பல ஆண்டுகளாக திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு மனுதாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் இரு தரப்பும் சமரசமாக சென்றுவிட்டதாக தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

முன்னதாக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன. இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுத்துள்ளார். விசாரணையில் மோசமான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் இதைப் பார்த்துக்கொண்டு கண்ணை மூடி இருக்காது எனவும் கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.