'சந்திரயான்-3' வெற்றி: இந்தியாவுக்கும், உலகுக்கும் ஒரு வரலாற்று சாதனை.. இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

ஜெருசலேம்,

நிலவின் தென்துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்ததற்காக உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘சந்திரயான்-3’ வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

‘சந்திரயான்-3’ வெற்றி இந்தியாவுக்கும், உலகுக்கும் ஒரு வரலாற்று சாதனை என்று குறிப்பிட்ட நேதன்யாகு, அனைத்து இஸ்ரேலிய குடிமக்களின் சார்பாக தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

அதனை தொடர்ந்து, யூத புத்தாண்டை முன்னிட்டு நேதன்யாகு மற்றும் இஸ்ரேல் குடிமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி இந்தியாவுக்கு வருமாறு நேதன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த உரையாடலின்போது தொழில்நுட்ப துறையில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

மேற்கூறிய தகவல்கள் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.