டெல்லியில் 15 வயது மகள், ரக் ஷா பந்தனன்று ராக்கி கயிறு கட்டிவிட சகோதரன் வேண்டுமென்று கூறியதால், பெற்றோர் செய்த தவறான செயல் போலீஸாரால் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது
டெல்லி, தாகூர் கார்டனில் உள்ள ரகுபீர் நகரில் வசிக்கும் சஞ்சய் குப்தா (41) அனிதா குப்தா (36) என்ற தம்பதியினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு தற்போது 15 வயதில் மகள் இருக்கிறார். மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி, இவர்களின் 17 வயது மகன், மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், ரக் ஷா பந்தன் பண்டிகை வரவிருப்பதால், ராக்கி கயிறு கட்டிவிட தனக்கு சகோதரன் வேண்டுமென்று, மகள் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இவ்வாறிருக்க, வியாழன் அதிகாலை 4.34 மணியளவில் மாற்றுத்திறனாளி பெண்ணின் கைக்குழந்தை காணாமல் போனதாக போலீஸாருக்குத் தகவல் வருகிறது. இதில், சட்டா ரயில் சௌக்கின் நடைபாதையில் வசிக்கும் அந்த மாற்றுத்திறனாளி பெண், அதிகாலை 3 மணியளவில் எழுந்து பார்த்தபோது, தங்களின் குழந்தையைக் காணவில்லை என்றும், யாரோ அவரைக் கடத்திச் சென்றுவிட்டதாகச் சந்தேகிப்பதாகவும் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.
அதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியிலிருந்து எல்.என்.ஜே.பி மருத்துவமனை வரை சுமார் 400 சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்த போலீஸார், சம்பவம் நடந்த நேரத்தில் பைக்கில் இருவர் சுற்றித்திரிவதைக் கண்டனர். அதன்பின் விசாரணையில், அந்த பைக் சஞ்சய் குப்தா பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக, போலீஸார் சஞ்சய் குப்தாவின் வீட்டுக்குச் சென்று குழந்தையை மீட்டு, பெற்றோரைக் கைதுசெய்தனர்.

இது குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) சாகர் சிங் கல்சி, “மகள் கேட்டதால், பெற்றோர் ஒரு பையனைக் கடத்த முடிவுசெய்தனர். அதையடுத்து, சத்தா ரயில் சௌக் அருகே தாயிடமிருந்து சிறிது தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை, தங்கள் மகனாகக் கவனித்துக் கொள்வதற்காகப் பெற்றோர் கடத்திச் சென்றனர். இறுதியில் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தாகூர் கார்டன் பகுதியினை 15 போலீஸார் ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தனர். பிறகு, ரகுபீர் நகரில் உள்ள சி-பிளாக்குக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தம்பதியையும், கடத்தப்பட்ட குழந்தையையும் கண்டுபிடித்தனர். பின்னர், அதிகாரிகள் குழந்தையை மீட்டனர்” என்று கூறினார். பச்சை குத்தும் தொழில் செய்பவரான சஞ்சய் குப்தா, இதற்கு முன்பு மூன்று குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY