எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் `INDIA’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் 31-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் கூட்டுவது, தேர்தல் திட்டங்களுக்கான துணைக் குழுவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் மேலும் பல கட்சிகள் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,“INDIA கூட்டணியில் தேசிய வளர்ச்சியை முன்னிறுத்த முயன்று வருகிறோம்.
எதிர்வரும் 3-வது கூட்டணிக் கூட்டத்தில் எனக்கு ஒருங்கிணைப்பு பொறுப்பு அளிக்கப்படும் என்ற உங்களின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கென தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை என பல்வேறு முறை உங்களிடம் கூறியிருக்கிறேன். எனவே, அந்தப் பதவி வேறு யாருக்காவது வழங்கப்படலாம். அனைவரையும் ஒன்றிணைக்க மட்டுமே நான் விரும்புகிறேன். மும்பையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் INDIA கூட்டணியில் NDA கூட்டணியிலிருந்து பல அரசியல் கட்சிகள் வந்து சேரும். இந்தக் கூட்டத்தில் இடப்பங்கீடு மற்றும் பிற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.