சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்துக்கு முதல்கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த 1968 ஜனவரி மாதம், அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோதுதான் வரலாற்று சிறப்புமிக்க ‘இருமொழிகொள்கை’ தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, பல துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், காலத்துக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழை சட்ட ஆட்சி மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக தயாராகும் வகையில், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் மற்றும் சட்டத் துறையின் தமிழ் பிரிவு மூலமாக தமிழில் சட்ட சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் மத்திய சட்டங்கள், அவசர சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள், அறிவிக்கைகளை தமிழில் மொழிபெயர்ப்பது ஆகிய பணிகளை தமிழக சட்டத் துறை செய்து வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழிஆகவேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுத்து, அதற்கான முயற்சிகளை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்து வந்தார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடிவரும் இந்த தருணத்தில், தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தோடும் மாநிலசட்ட ஆட்சி மொழி ஆணையம் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில்மொழிபெயர்த்து, அவற்றை பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பயன்பாட்டுக்காக கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது.
இப்பணிக்காக மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்துக்கு முதல்கட்டமாக ரூ.3 கோடியும், பின்னர் தேவைக்கு ஏற்ப நிதிஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். பாவேந்தர் காட்டிய வழியில் செம்மொழி தமிழுக்கு சட்டத் துறையிலும் உரிய இடத்தைபெற்றுத் தருவோம் என்றார்.