மதுரை: மதுரை அம்மாபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் இன்று இயற்கை முறை விவசாயம் பற்றி அறிந்துகொள்ள உலகநேரியிலுள்ள இயற்கை விவசாயத் தோட்டத்திற்கு களப்பயணம் சென்றனர்.
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி அரசு தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தலைமையாசிரியர் ச.மங்களேஸ்வரி, ஆசிரியை பி.சண்முகப்பிரியா ஆகியோருடன் அருகிலுள்ள உலகநேரி கிராமத்திலுள்ள இயற்கை விவசாயம் தோட்டத்திற்கு இன்று களப்பயணம் சென்றனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பின்புறமுள்ள உலகநேரியில் 8 ஏக்கர் பரப்பில் 5 நண்பர்கள் இணைந்து மலிவு விலையில் நஞ்சில்லா காய்கறிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த தோட்டத்துக்கு இன்று தொடக்கப்பள்ளி மாணவர்கள் சென்றனர். அங்கு இயற்கை விவசாயிகள் பிரசாந்த், ஜாபர் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர். மாணவர்களுக்க இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கினர். பின்னர் மாணவர்கள் ஆவலுடன் சென்று காய்கறிகளை பார்வையிட்டனர். பந்தல் கொடியில் தொங்கிய புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை ஆகியவற்றை தொட்டுப்பார்த்து மகிழ்ந்தனர்.
பின்னர் தலைமையாசிரியர் ச.மங்களேஸ்வரி மாணவர்களிடம் கூறுகையில், “ரசாயன உரங்கள் மூலம் விளையும் காய்கறிகள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றன. இயற்கை முறையில் விளையும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன. மேலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகள் மூலம் கிடைக்கின்றன. இதன் மூலம் நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்கின்றன. இதேபோல் உங்களது பெற்றோரையும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.