உதயநிதிய விட்றாதீங்க – நேரடியாக களத்தில் இறங்கிய மோடி.. சகாக்களுக்கு முக்கிய அட்வைஸ்!

சென்னை தேனாம்பேட்டையில் தமுஎகச சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, சனாதனம் என்பது சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது என்றார். மேலும், டெங்கு, மலேரியாவை ஒழிப்பது போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று அதிரடியாக பேசினார். உதயநிதி பேசிய சில மணி நேரங்களில் சனாதன ஒழிப்பு விவகாரத்தை பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கையிலெடுத்து நாடு முழுவதும் சர்ச்சையாக்கினர்.

இந்துக்களை இனபடுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைக்கிறார் என பாஜக குற்றம்சாட்டியது. உள் துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா தொடங்கி பலரும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தனர். உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உதயநிதிக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், உதயநிதி ஸ்டாலினோ இதையெல்லாம் கூலாக கையாண்டு வருகிறார். தான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது எனவும், சனாதனம் குறித்து தான் பேசியதில் உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து என்ன சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் உறுதிப் பட தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாததுதான் சனாதனம் என்றும் மத்திய அரசை நேற்று சாடியிருந்தார். உதயநிதிக்கு ஆதரவாக தமிழகத்திலுள்ள திமுகவின் தோழமைக் கட்சிகளும், சீமான், திருமுருகன் காந்தி, பா.ரஞ்சித், அமீர் உள்ளிட்டோரும் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு பிரதமர் மோடி வரை எதிரொலித்துள்ளது.மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில் உதயநிதியின் பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, சனாதன தர்மம் தொடர்பான உதயநிதி பேச்சுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரதமர் தனது அமைச்சரவை சகாக்களுக்கு, “வரலாற்றுக்குள் செல்ல வேண்டாம், ஆனால் அரசியலமைப்பின் படி உண்மைகளுடன் உறுதியாக இருங்கள். சனாதன தர்மம் தொடர்பான தற்போதைய நிலை குறித்து மக்களிடம் எடுத்துக்கூறுங்கள்” என அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரேசிலை புரட்டிப்போட்ட சூறாவளி – வெளுத்து வாங்கிய கனமழை – 21 பேர் பரிதாப பலி..

சனாதனம் தொடர்பாக் கடந்த 4 நாட்களாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், முதல் முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர். இதனிடையே உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதி பெறவும் பாஜக தரப்பு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.