படிக்கட்டுப் பயணம்; தவறி விழுந்த மாணவருக்கு கால்முறிவு – பேருந்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

கல்லூரி மாணவரின் கால்மீது, பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய சம்பவத்தில், பஸ் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம், “விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 21) எனும் மாணவர் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் இன்ஜினீயரிங் படித்து வருகிறார்.

அடித்து நொறுக்கப்பட்ட பஸ்

இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாணவர் ஹரிபிரசாத், தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் காத்திருந்தார். அப்போது காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு நோக்கிச்சென்ற அரசுப் பேருந்தில் மாணவர் ஹரிபிரசாத் உள்பட கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஏறி பயணம் செய்துள்ளனர்.

அப்போது, பேருந்து புறப்பட்ட சமயத்தில் படிக்கட்டிலிருந்து மாணவர் ஹரிபிரசாத் எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் பின் சக்கரமானது மாணவரின் காலில் ஏறி இறங்கியதில் ஹரிபிரசாத்துக்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சக கல்லூரி மாணவர்கள், விபத்துக்கு காரணமான அரசு பேருந்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

பயணிகள்

பேருந்தின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டதில் அந்த இடமே கலவர களமாக மாறிப்போனது. தொடர்ந்து விபத்தில் காயமடைந்த மாணவர் ஹரிபிரசாத்தை மீட்ட பயணிகள், காரியாப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவியூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.