நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான `ஜெயிலர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் முதலில் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிரூத் ஆகியோருக்கு காரைப் பரிசாக வழங்கியிருந்தார்.நேற்று ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழு 300 பேரை வரவைத்து விழா நடத்தி அனைவருக்கும் ஜெயிலர் என பொறிக்கப்பட்ட தங்க காசை பரிசாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கிறது.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171- வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளியான நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதனை உறுதி செய்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய எல்லா படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதனால் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.