5 மாநில தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு – முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரம்

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மாதங்களில் முடிவடைகிறது.

எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.

பொதுவாக தேர்தலுக்காக தயாராகி வரும் மாநிலங்களில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் கமிஷனர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி இந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷனர்கள் ஏற்கனவே நேரில் சென்று முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டனர்.

அடுத்த மாதம் வெளியாகும்

தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் இந்த பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது மாநில வாக்காளர் பட்டியலையும் அவர்கள் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் தொடக்கத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து 5 மாநில தேர்தல் வெளியிடப்படும்.

குறிப்பாக, அடுத்த மாதம் மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ், பா.ஜனதா

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்கள் காங்கிரசிடம் உள்ள நிலையில், தெலுங்கானாவை பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி செய்கிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மிசோ தேசிய முன்னணி அதிகாரத்தில் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற இருக்கும் இந்த 5 மாநில தேர்தல், மக்களவை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.