ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகப் புதிதாக நியமிக்கப்பட்ட அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் இதன்போது தெரிவித்தார். அத்துடன் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது விளக்கமளித்ததுடன் ஐக்கிய இராஜ்ஜியம் வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக, பாராளுமன்றப் பரிமாறல் வேலைத்திட்டங்கள், கட்சித் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக காணப்படும் சந்தர்ப்பங்கள், பாராளுமன்றத்திலுள்ள நிதிக் குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.