பிஹாரில் பள்ளி மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 10 பேரை காணவில்லை என அதிகாரிகள் தகவல்

பாட்னா: பிஹாரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த மாணவர்கள் 10 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பெனியாபட் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இப்பகுதி மாணவர்கள் வழக்கம்போல் இங்கு பாயும் பாக்மதி ஆற்றைக் கடக்க படகில் சென்றுள்ளனர். படகில் 34 மாணவர்கள் சென்ற நிலையில், படகு ஆற்றின் நடுப்பகுதியில் மூழ்கி உள்ளது. இன்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்ததும் மாநில பேரடர் மீட்புப் படை மற்றும் மத்திய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். நீரில் மூழ்கிய 30 மாணவர்களில் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், 10 பேரை காணவில்லை என்று மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரி அஜய் குமார் தெரிவித்துள்ளார். காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முசாபர்பூரில் இருந்த முதல்வர் நிதிஷ் குமார், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்கும் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.