ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்..? கூடுதல் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்,

உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக போரானது நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றன.

இதில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷியாவுக்கு பயணம் செய்தது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் வடகொரியாவின் எண்ணம் பற்றி குறிப்பிட்டு பேச விரும்புகிறேன்.

இந்த போரை ரஷிய அதிபர் புதின் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். ரஷிய பேரரசின் பெருமையை மீட்டெடுக்க போகிறோம் என அவர் நினைத்து கொண்டார். ஆனால், ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் அவர் தோல்வி அடைந்து விட்டார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்களையும் மற்றும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான பணம் செலவிட்டு அவற்றையும் இழந்த பின்னர், கிம் ஜாங் அன்னிடம் உதவி கேட்டு புதின் கெஞ்சி கொண்டிருக்கிறார் என பேசியுள்ளார்.

அதனால், வடகொரியா மற்றும் ரஷியா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம்.

கொரோனா பெருந்தொற்றின்போது, அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. பெருந்தொற்று பரவலுக்கு பின்னர், முதன்முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ரஷியாவுக்கு கடந்த செவ்வாய் கிழமை பயணம் மேற்கொண்டார். அனைத்து கெட்ட சக்திகளையும் தண்டித்து, போரில் ரஷியா வெற்றி பெறும் என்று புதினிடம், கிம் ஜாங் அன் கூறினார்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே, ஆயுத ஒப்பந்தங்கள் நடைபெற்று இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்தே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.