துபாய் : தென்மேற்கு ஆசிய நாடான ஏமனின் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015- முதல் போர் நடந்து
வருகிறது.
அதிபருக்கு ஆதரவாக மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவும், ஹவுதி படைக்கு ஆதரவாக மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈரானும் செயல்பட்டு வருகின்றன. இதனால் எட்டு
ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பொதுமக்கள் உட்பட ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.
ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையிலான ஏழு ஆண்டு பகை, சீனாவின் முயற்சியால் கடந்த மார்ச்சில் உறவாக மாறியது. இதையடுத்து, ஏமனில் போர்நிறுத்தப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் ஏமன் தலைநகர் சனா சென்ற சவுதி குழு,போர் நிறுத்தப் பேச்சில் ஈடுபட்டது. இதையடுத்து, சவுதியில் உள்ள ரியாத்தில் ஓரிரு நாளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இது தொடர்பாக பேச்சு நடத்த உள்ளனர். இதற்காக ஹவுதி பிரதிநிதிகள் குழு சவுதி வந்தடைந்துள்ளது.
ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் சனா விமான நிலையத்தை முழுமையாக மீண்டும் திறப்பது, எண்ணெய் வருவாயில் இருந்து பொது ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்குதல், மறுகட்டமைப்பு முயற்சிகள் மற்றும் வெளிநாட்டுப் படைகள் ஏமனை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு விதித்தல் போன்றவை இந்த பேச்சின் போது விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement