பாட்னா: வரும் மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹாரின் மதுபானியில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பிஹாரில் நிதிஷ் குமாரும் லாலு பிரசாத்தும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றனர். இவர்களின் கூட்டணி தண்ணீரும் எண்ணெயும் போன்றது. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நாட்டின் பிரதமராக கனவு காண்கிறார். லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவை பிஹார் முதல்வராக்க கனவு காண்கிறார். இருவரின் கனவும் பலிக்காது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைந்து வருகின்றனர். இதன்காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்பார். பிஹாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.